Saturday, June 20, 2009

ஐந்தாம் வெளிச்சம் : "வள்ளல் பெருந்தகை" அல்ஹாஜ் க.கு.இபுறாகிம் அலி அவர்கள்


இளையான்குடி, புதூரில் ஆலிஜனாப். கட்டச்சி. குப்பை ராவுத்தர் அவர்கட்கும், ஜனாபா மைமூன் பீவிக்கும், மகனாக 1910ல் பிறந்தார்கள்.

புதூரிலேயே, தமிழ்க்கல்வியைப்பயின்றார்கள், இளம் வயதிலேயே தமிழ்ப்பற்று அதிகம் கொண்டு, தமிழ் சொற்பொழிவு ஆற்றுபவர்களிடம் நெருங்கி பழகி, தமிழ்ப்புலமை மீது அளவில்லா ஆர்வம் காட்டி வந்தார்கள்.

1921ல் மலேசியாவுக்கு பயணம் மேற்கொண்டார், அங்கு போய் ஆரம்பத்தில் ஒரு கடையில் சிப்பந்தியாக பணியாற்றி, நேர்மை, சலியாத உழைப்பு, செம்மையான ஊக்கம், வியாபார யுக்தி, இவற்றை மூலதன‌மாகக்கொண்டு, பல்துறை வர்த்தகத்தின் உரிமையாளராக விளங்கினார்.

இவருக்கு, மலேசியா, தைபிங் நகரில் 'பேராஹ் முஸ்லீம் ரெஸ்டாரென்ட்' என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் இவரே.

மலேசியாவின் பொதுத்துறை, சங்க மன்றங்களில் உறுப்பினராக இருந்து பொதுச்சேவைகளில் ஆர்வமுள்ளவராக விளங்கினார்.

இரண்டாம் உலகப்போருக்குப்பின், தைப்பிங்கிள் வெளிவந்த 'உதயசூரியன்' என்ற பத்திரிக்கை நலிவுற்ற நிலைக்கு வந்தவுடன், அதற்கு உதவி செய்ய எண்ணம் கொண்டு, அப்பத்திரிக்கைக்கு புதிதாக 'உதயசூரியன் அச்சகம்' நிறுவ உதவியுள்ளார்கள்.

தைப்பிங்கில், இந்திய விடுதலை போராட்ட ராணுவ நடவடிக்கைக்குழு (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்) பொறுப்பினராகவும், தைப்பிங் இந்திய முஸ்லீம் சங்கத்தின் நிர்வாக உறுப்பினராகவும், பிறகு ஜனநாயக முறைப்படி தேர்வு பெற்று, தலைவராகவும், உப தலைவராகவும் சமுதாய பணியிலும், இந்திய ஹணபி பள்ளி டிரஸ்டியாகவும், கோலாலம்பூரில் உள்ள "பெடரல் தலைந‌கர் தேசிய நெகரா முஸ்லீம் பள்ளிக்கு" தாராளமாக நன்கொடை வழங்கியுள்ளார்கள். தைபிங் இந்து தேவாலய சபா பள்ளி மண்டபத்திற்கும் கணிசமாக உதவியுள்ளார்கள்.

தைபிங் இந்திய அனாதைக்குழந்தைகளின் விடுதிக்கு ஆயுட்கால உறுப்பினராக இருந்து சேவைகளையும், தேவைகளையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

தைப்பிங் மலேசியன் இந்தியர் காங்கிரஸுக்கு தொடக்க கால தலைவராகவும், பின் அதன் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டவர்களில் இவரும் ஒருவரே என்றால் மிகையாகாது.

1956ம் ஆண்டு தன் புனித 'ஹஜ்ஜை' நிறைவேற்றினார்கள்.


1952ல் இளையான்குடி உயர் நிலைப்பள்ளிக்காக, ஆசிரியர் தங்குவத‌ற்கு ஒரு வீடு ஒன்றை, பள்ளிக்கூட வளாகத்திற்குள்ளே கட்டி கொடுத்தார்கள்.

1957ல் புதூரில் இருந்த 'கற் பள்ளிக்கு' இவர்களது தாராள பொருளுதவியால், பள்ளீயின் முக்கியமான மராமத்துகள் செய்யப்பட்டு, அப்பள்ளி புதுப்பிக்கப்பட்டது.

இவருடைய ஆரம்ப நிதி உதவியைக்கொண்டும், டிரஸ்டி போர்டார்களும் முன்னின்று மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் டாங்க் கட்டி வீதிகள் தோறும் பைப் வசதிகள் அமைத்துக்கொடுத்துள்ளனர்.

1959க்குப்பின், இவர்கள் மத்ரஸாவுக்கென நல்லதொரு புதிய தார்சு கட்டிடத்தை கட்டி தந்துள்ளார்கள்

1972 செப் 29ல் இளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரி வளாகத்தில் 2வ‌து கட்டிடமாக அல்ஹாஜ் கே.கே.இபுறாகிம் அலி அவர்களின், மறைந்த‌ துனைவியார் நினைவாக 'ம‌ஹ்மூதா பீவி நினைவு கட்டிடத்திற்கு' பல்கலைக்கழக துணை வேந்தர் மு.வரதராஜனார் அவர்கள் தலைமையில் அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அவர்களின் இளைய மகனார் டாக்டர் கே.கே.இ. செளக்கத் அலி அவர்கள் அடிக்கல் நாட்டியும், கட்டிடம் நிறைவு பெற்றவுடன், 1976 ஏப் 30ல், கேரள மாநிலம் காலிகட் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் அல்ஹாஜ் முனைவர் என்.ஏ. நூர் முஹமது அவர்கள் த‌லைமையில், அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்கள் தம் துனைவியார் நினைவு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இளையான்குடி உயர் நிலைப்பள்ளியில், அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்கள் நினைவாக, 'இயற்பியல் துறை ஆய்வுக்கூடம்' கட்டிடத்தை கட்டி, அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் கே.கே.இ. முஹமது அலி அவர்கள் (இவரும் தந்தை வழியிலேயே) பள்ளிக்கு அர்ப்பனிக்கிறார்

இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக தான் பிறந்த மண்ணிலே (புதூரிலே) அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி மேல்நிலைப்பள்ளி 1972ல் உருவானது புதூருக்கும், பக்கத்தில் உள்ள பெறுவாரியான கிராமங்களின் கல்வி வளர்ச்சிக்கும் வித்திட்டுவிட்டு சென்றுள்ளார்கள். இன்று இப்பள்ளியினால் மர்ஹூம் அல்ஹாஜ் கே.கே இபுறாஹிம் அலி அவர்களுக்கும், இவர்களால் இப்பள்ளிக்கும் புகழ் மணம் பரப்பிக்கொண்டிருக்கிறது

அல்ஹாஜ் கே.கே இபுறாஹிம் அலி அவர்கள்,தைபிங் நகரில் 21‍ 12 1979 அன்று வஃபாத் ஆனார்கள் (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊண்)



வள்ளல் பெருந்தகை அல்ஹாஜ் க.கு.இபுறாகிம் அலி அவர்கள்

ஜஸ்டிஸ் ஹாஜி பசிர் அஹ்மது அவர்கள், நேரில் கேட்டுக் கொண்டதன் பேரில்,S.I.E.T. சென்னை. நிர்வாகத்துக்கு ஒரு பெரும் தொகையை வழங்கியுள்ளார்கள், இன்றும் அந்த நிர்வாகத்தின்(Justice Basheer Ahmed Sayed College for Women, Chennai-600 018) அலுவலகத்தில், தகவல் போர்டில் ஹாஜி கே கே இபுறாஹீம் அலி அவர்களின் பெயரை எழுதி, கண்ணியப்படுத்தி இருக்கிறார்கள். S.I.E.T. நிர்வாகத்துக்கு நன்றி.

மற்றும் திருச்சி ஜமால் முஹமது கல்லுரிக்கும் கணிசமான தொகையை வழங்கியுள்ளார்கள்

(இந்த தகவல்களை அளித்த அல்ஹாஜ் கே.கே.இபுறாஹிம் அலி அவர்களின் மூத்த மகனார் அல்ஹாஜ் கே.கே.இ.முஹமதலி அவர்களுக்கு, இணையதளத்தின் சார்பாக மணமார்ந்த நன்றி...)


நிர்வாகம் HOME

2 comments:

Anonymous said...

ஹாஜி கே.கே.இப்ராஹீம் அலி அவர்களுடைய அறிய தக்வல்கள் தங்களின் ஐந்தாம் வெளிச்சத்தில் வெளியிட்டு இருக்கிறீர்கள். உண்மையிலேயே இதில் உள்ள பல தகவல்கள் இன்றைய இளம் தலை முறையினர் பலருக்கு தெரியாத ஒன்றாகும். வெளிச்சத்திற்காக நீங்கள் செய்யும் பணி அளவற்றது. இந்த பணி தொடர எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்.

ilayangudians said...

நிறை குடம் தளும்பாது என்பார்கள். அதுபோல், கல்வி வளர்ச்சிக்கும், அரசியல் பங்களிப்பிற்கும், சமுதாய நலனிற்கும் உதவிய பெருமகனார் பிறந்த நம் இளையான்குடி, இப்போது - தற்புகழ்ச்சி, சுயநலம், சுரண்டல், இறை அச்சமின்மை, பகட்டு, தற்பெருமை முதலிய குணங்கள் மட்டுமே நம்மிடையே எஞ்சி இருக்க காண்கின்றோம். இவற்றை மற்ற துவா செய்வோம்.